பள்ளிக்கூட பஸ்சின் அவசரவழிக்கதவு திறந்ததால் கீழே விழுந்த மாணவி படுகாயம்; தாசில்தார் நேரில் விசாரணை

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவரது மகள் ரதிமா(வயது 10) என்பவர் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் இன்று காலையில் அந்த பள்ளியின் வாகனத்தில் ஊரிலிருந்து பள்ளிக்கு வந்தார். கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் பகுதியில் வாகனம் ஒரு வளைவில் திரும்பும் போது வாகனத்தின் அவசர வழிக்கதவு திடீரென திறந்து கொண்டது.
இதனால் அந்த இடத்தில் அமர்ந்திருந்த மாணவி ரதிமா வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
மாணவர்களின் கூச்சலை தொடர்ந்து டிரைவர் ஆட்கொண்ட சுந்தரம் (67), பச்சை திடீர் பிரேக் போட்டு நிறுத்தினார். பின்னர் காயமடைந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தகவல் அறிந்து பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு வந்து மானவிக்கான சிகிச்சை முறைகளை துரிதபடுத்தினர்.
கோவில்பட்டி தாசில்தார் சுசிலா தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மாணவிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பஸ்சின் அவசர வழிக்கதவு திறந்தது எப்படி என்பது பற்றி விசாரணை மேற்கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
