காங்கிரசில் இருந்து குலாம்நபி ஆசாத் விலகினார் ; ராகுல்காந்தி மீது சரமாரி குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்து இருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி என்ற முறையிலும், தனது சொந்த மண்ணில் கட்சியை தொடங்க விரும்புவதாக அவர் கூறி இருக்கிறார்.
“நான் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு செல்வேன். மாநிலத்தில் எனது சொந்த கட்சியை தொடங்குவேன், தேசிய அளவில் அது சாத்தியமா என்பதை பின்னர் சரிபார்க்கிறேன்,” என்று அவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.
இந்த சூழலில், குலாம்நபி ஆசாத் அக்கட்சியின் மீதும் ராகுல் காந்தி மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக ராகுல் காந்தி கட்சியில் இணைந்தபோது தான் கட்சியில் அனைத்து விஷயங்களும் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக கலந்து ஆலோசனை செய்யப்படுவது முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியில் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம், ராகுல்காந்தியின் நடவடிக்கைகள், அரசியலில் அவருடையை முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் சோனியாகாந்தி பெயரளவிலேயே தலைவராக இருக்கிறார். ஆனால் கட்சியின் முக்கிய முடிவுகளான மாநில தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பு உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் ராகுல் காந்தி மற்றும் ராகுல் காந்தியை சார்ந்தோரால் மட்டுமே எடுக்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலும் ரிமோட் கண்ட்ரோல் முறை வந்துவிட்டது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். கட்சியில் தான் அரை நூற்றாண்டு காலமாக இருந்தும், கட்சியின் மூத்த தலைவர்களை மதிப்பதில்லை, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
1970களில் இருந்து காங்கிரஸ் கட்சியில் பயணித்து வந்த குலாம் நபி ஆசாத். காஷ்மீர் முதல்-மந்திரி, மத்திய மந்திரி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் எனப் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.