கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை; ரெயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய தண்ணீரில் சிக்கிய பள்ளி வேன்

கோவில்பட்டியில் இன்று காலையில் இருந்து வெயில் கொளுத்தியது. பிற்பகல் 2 மணிக்கு மேல் வெப்ப நிலை மாறி மேகம் திரண்டு இருள் சூழ்ந்தது.
3 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. காற்று இல்லாமல் மழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. புதுரோடு இறக்கத்தில் வழக்கம் போல் தண்ணீர் தேங்கியது.
மெயின் ரோட்டில் கால்வாயில் மழை தண்ணீர் கரை புரண்டு ஓடியது. ஏற்கனவே சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
இளையரசனேந்தல் ரோட்டில் `சாக்கடை பாலம்’ என்று அழைக்கப்பபடும் ரெயில்வே சுரங்க பாலத்தில் எப்போதும் போல் மழை தண்ணீர் தேங்கி போக்குவரத்தை துண்டித்தது.
முன்னதாக தேங்கிய மழை தண்ணீரில் தனியார் பள்ளிக்கூட வேன் பழுதாகி சிக்கிக்கொண்டது. இதனால் வேனில் இருந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு வாகனம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
ஒரு மணி நேர மழைக்கு பிறகு அந்த பாலத்தில் தேங்கிய தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. பின்னர் பழுதாகி நின்ற வேனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எப்போது மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்படும் இந்த பாலத்துக்கு விடிவுகாலம் எப்போது தான் வருமோ? என்று மக்கள் புலம்பியபடி அந்த இடத்தை கடந்து சென்றனர்,
