• June 7, 2025

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க த.மா.கா.கோரிக்கை

 இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: பெற்றோர் மீது   நடவடிக்கை எடுக்க த.மா.கா.கோரிக்கை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், நகர செயலாளர் டி.மூர்த்தி ஆகியோர் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள துணை மின் நிலையம் அருகே கடந்த 15ஆம் தேதி காலை நடந்த விபத்தில் பள்ளி மாணவர் ஸ்ரீ புஷ்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது, விபத்தை பார்த்தும் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிய ஓட்டுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மனிதாபிமானம் இல்லாத ஓட்டுநரின் செயலுக்கு அந்தப் பள்ளி நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் வெளிவந்துள்ளன. இதில் அந்த தனியார் பள்ளி பேருந்து மிகவும் வேகமாக செல்வது போன்று இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை பள்ளி பேருந்துகளின் ஆய்வின் போது ஓட்டுனர்களுக்கு மனிதாபிமானம் தொடர்பாகவும் வகுப்பு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதுவும் பள்ளி சிறுவர்களை ஏற்றிச்செல்லும் பேருந்து இயக்கும் ஓட்டுநர்களுக்கு உளவியல் ரீதியான சான்று கட்டாயம் என்பதை சட்டமாக்க வேண்டும்.

கோவில்பட்டியை பொருத்தவரை பள்ளி மாணவ மாணவிகள் இருசக்கர வாகனங்களை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இல்லாத வயதில் அதிவேகமாக அவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமல்லாது எதிரே சாலையில் பயணிப்போரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக தனியார் பள்ளிகளில் இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது என கூறியுள்ளதால், மாணவ மாணவிகள் அருகே உள்ள நண்பர் மற்றும் உறவினர் வீடு வரை இருசக்கர வாகனங்களில் வந்து, அங்கே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு பள்ளிக்கு செல்கின்றனர்.
தங்களுக்கான கல்வி கட்டணத்தில் மட்டும் குறிக்கோளாக இருக்கும் தனியார் பள்ளிகள் இவற்றை கண்டு கொள்வதில்லை.

எனவே காவல்துறையும் வட்டாரப் போக்குவரத்து துறையும் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு, பள்ளி மாணவர்கள் வாகனங்களை இயக்கினால் அவர்களது பெற்றோருக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற விபத்துகளை தவிர்க்க முடியும்.

மேலும், இரவு நேரங்களில் அதிக சத்தம் கொண்ட சைலன்சர் பொருத்திய இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் இயக்கி வருகின்றனர். இது போன்ற நபர்களை காவல்துறையினர் கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதேபோல் நகரத்தில் இயங்கும் மினி பேருந்துகளும் தங்களுக்கு ஒதுக்கப்படாத நிறுத்தத்தில் திடீரென நிறுத்துவதும் அதிக சத்தம் எழுப்பும் காற்று ஒலிப்பானை பயன்படுத்துவதும் என பொதுமக்களை பயமுறுத்தி வருகின்றனர். அவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்,
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது,
இந்த மனுவின் நகல்கள் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி,., தூத்துக்குடி மாவட்ட சூப்ப்பிரண்டு, மாவட்ட கலெக்டர், கோவில்பட்டி கோட்டாட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *