காமநாயக்கன்பட்டி விண்ணேற்பு பெருவிழா திருத்தேர் பவனி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றிய சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தின் விண்ணேற்பு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி விழா நடத்தப்பட்டது.
கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இந்த ஆண்டு ஆலயத்தில் விண்ணேற்பு பெருவிழா கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் நற்கருணை , சிறப்பு திருப்பலி ஆகியவை நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று அதிகாலை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு பாளை.மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தேரடி திருப்பலி நடத்தி தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து திருத்தேர் பவனி ரத ஊர்வலம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இறை மக்கள் கும்பிடு சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழகம் முழுவதில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலர் பங்கற்றனர்.
விழாவினை முன்னிட்டு கோவில்பட்டியில் இருந்து காமநாயக்கன்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.