அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி முறையீடு: ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கண்டனம்
கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அ.தி.மு.க. பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது, ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை ஐகோர்ட்டே விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என்றும் வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு புகார் மனுவை பரிசீலித்தும், சம்பந்தப்பட்ட தனி நீதிபதியின் கருத்தை அறிந்தும் உத்தரவு பிறப்பிப்பிக்கப்படும் என்றும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது வைரமுத்து தரப்பில் ஆஜரான வக்கீல் விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்று விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி தலைமை நீதிபதியிடம் புகாரளித்தது குறித்து நீதிபதி கிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது ஜூலை 11 உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில் உங்கள் தரப்பு செயல்பாடு உள்ளது என்று கூறினார்.
மேலும் இது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்றும் கீழ்த்தரமான செயல் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் என்றும் திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.