• June 7, 2025

ஆகஸ்டு 5 – வீடுகளில் வரலட்சுமி விரத பூஜை

 ஆகஸ்டு 5 – வீடுகளில் வரலட்சுமி விரத பூஜை

ஆகஸ்டு 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் வரலட்சுமி பண்டிகை கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் பவுர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக்கிழமையில் தான் இவ்விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்றால் முதல் நாளான வியாழனன்றே அம்மனை அழைக்கிறோம்.
வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் திருமணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்கின்றனர். மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.

திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் வரலட்சுமி விரதத்தன்று புதுமணம் முடித்த பெண்ணிற்கு இந்நோன்பு எடுத்து வைக்கப்படும். புகுந்த வீட்டில் இந்நோன்பு அனுசரிக்கும் வழக்கம் உள்ளது. பூஜை செய்யப் போகுமிடத்தில் இழை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதையை பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும்.
கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைக்கிறோம். அம்மனின் முகத்தைகலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்கிறோம். அம்மனை அழைப்பதாக உள்ள பாடல்கள் பாடி வரலட்சுமி அம்மனை வரவற்கிறோம்.
குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே. வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்கு அனுபவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.
லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது. மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.

லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள். லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும். மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும். அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம். வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும். வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.
வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம். துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள்.
இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.
மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.
மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

வரலட்சுமி விரதத்தின் போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம்தான் மகாலட்சுமிக்கு பிடித்தமானது. சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். உங்க கையால் கோலம் போட்டு மகாலட்சுமியை அழைக்க வேண்டும். வீடு சுத்தமாக இருக்க வேண்டும். வியாழக்கிழமை மாலையே வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். லட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். மஞ்சள் குங்குமம் பூ வைத்து முடி கயிறு வைத்து பூஜிக்கலாம்.

ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு அவசியம். வயது மூத்த சுமங்கலிகள் கையால் நோன்புக்கயிறு கட்டிக்கெள்ள வேண்டும். சர்க்கரைப் பொங்கல் பாயசம், தாமரை மலர் அவசியம். மனதில் பக்தியுடன் சந்தோஷத்துடன் பூஜை செய்ய வேண்டும். பட்டுத்துணியால் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும். சரிகை உள்ள துணியால் அலங்கரிக்க வேண்டும். வெள்ளை கறுப்பு நிறத்தில் வஸ்திரம் இருக்கக்கூடாது. மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் வஸ்திரம் இருந்தால் அற்புதமானது. கலசத்தில் ஸ்ரீ வரலட்சுமி நமஹ என்று இருக்க வேண்டும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *