தூத்துக்குடி மாவட்டத்தில் 295 தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை
தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் எம்.பொன்னையா தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டின் 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடியை ஏற்றுவதற்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேசிய கொடி அதிக அளவில் கிடைப்பதற்காக தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு 16 ஆயிரம் தேசிய கொடிகள் வந்து உள்ளன. இந்த தேசிய கொடிகள் கோட்டத்தில் உள்ள 215 கிராம தபால் நிலையங்கள், 80 தபால்துறை தபால் நிலையங்கள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு தேசிய கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை நேரடியாக தபால் நிலையங்களில் பெறலாம். அதே போன்று தபால்துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து ஆன்லைனிலும் தேசிய கொடியை பெறலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு தபால்காரர்கள் மூலம் நேரடியாக வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று வினியோகிக்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தபால் அலுவலகத்தில் தேசிய கொடியை வாங்குபவர்கள் செல்பி எடுப்பதற்கான சிறப்பு இடமும் அமைக்கப்பட்டு உள்ளது. இதனையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மொத்தமாகவும் மக்கள் தேசிய கொடி தேவைப்படுபவர்கள் வணிக நிர்வாக அலுவலர்கள் பொன்ராம்குமார் (தூத்துக்குடி) 99426 93129, முகமது சமீம் (திருச்செந்தூர்) 97916 55030 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இதே போன்று 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தபால் துறை சார்பில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் வருகிற 8-ந் தேதி விழிப்புணர்வு நடைபயணம் நடக்கிறது. மற்ற இடங்களில் 12-ந் தேதியும் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.