அ,தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் மயக்கம்
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிடவற்றை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளனர்.14 மாதம் தி.மு.க. ஆட்சியில் விலைவாசி,சொத்து வரி,மின்கட்டணம் என எல்லாவற்றிலும் வரி உயர்ந்துள்ளது.
எங்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுங்கள் என பிரதான எதிர்க் கட்சியான எங்களிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். உங்கள் ஆட்சி அதிகாரம் எதிர்க்கட்சியை அழிப்பதற்கு அல்ல. மக்களுக்கு நன்மை செய்வதற்காக தான்; அ.தி.மு.க.வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
தமிழகத்தில் அ.தி.மு.க. நடத்திய போராட்டத்தை பார்த்து மு.க.ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.விற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை மறைக்க, கட்சியினர் மீது அவர் பொய் வழக்கு போடுகிறார். ஈவு இரக்கம் இல்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார் ஸ்டாலின்.
மின் கட்டணத்தை உயர்த்தி ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தை பிரிக்கும் கட்சியாக தி.மு.க. உள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. சிமெண்ட் ஆலைகளை தி.மு.க.,வினர் நடத்துவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது
இவ்வாறு அவர் பேசினார்.
சுமார் அரை மணி நேரம் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதன் பின்னர் ஆர்ப்பாட்ட மேடையில் நின்றுகொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால், மேடையில் இருந்த இருக்கையிலேயே அவர் அமர வைக்கப்பட்டார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள் தண்ணீர் கொடுத்து மேடையில் உள்ள இருக்கையில் அமரவைத்தனர். கடுமையான வெயில் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு லேசான தலைசுற்றலுடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் சிறிது நேரத்திற்கு பின் அவர் சகஜ நிலைக்கு திருப்பினார். இதையடுத்து, ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததையடுத்து எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.