கோவில்பட்டி புதுரோடு இறக்கத்தில் பள்ளங்களை மூடும் கண்துடைப்பு பணி

கோவில்பட்டி நகரின் மிக முக்கியமான சாலையாக புதுரோடு கருதப்படுகிறது. இந்த பகுதி வழியாக தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும். புதுரோடு என்ற பெயருக்கு ஏற்றபடி இந்த சாலை இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.
இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு வாறுகால் அமைப்பதற்காக சாலையின் ஒரு பகுதியில் நகரசபை நிர்வாகத்தின் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு பணி முழுமை அடையாமல் இருக்கும் நிலையில் மறுபுறத்தில் ஒரு இடத்தில் சாக்கடையை சாலைக்கு திருப்பி விட்டு இருக்கிறார்கள்.

இதனால் புதுரோடு இறக்கத்தில் சாலையின் ஒரு பகுதியில் அடிக்கடி சாக்கடை ஆறு ஓடும். மழை தண்ணீருடன் சாக்கடையும் கலந்து ஓடுவதால் சுகாதார கேடு நிலவி வருகிறது. மேலும் சாலை அரித்து போய் இருப்பதால் பள்ளம் தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் தவறி விழுந்து செல்வது வாடிக்கையாகி விட்டடது.
புதுரோட்டில் இருந்து எட்டயபுரம் சாலை சந்திப்பு வரை பல்லாங்குழி சாலையாக காட்சி அளிக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிர்புறம் தார்ச்சாலை மறைந்து மண்சாலை ஆகி விட்டது. மருத்துவமனை முன்புறம் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
என்றைக்கு நகரசபை நிர்வாகத்தின் கண்கள் திறக்குமோ என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் அந்த சாலையை ஒவ்வொரு நாளும் கடந்து சென்று கொண்டிருந்த வேளையில் இன்று புதுரோடு இறக்கத்தில் குண்டு குழியுமாக உள்ள பள்ளங்களை மணல் போட்டு ஜே.சி.பி.எந்திரம் மூலம் சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.
இது வெறும் கண்துடைப்பு தான், திரும்பவும் மழை பெய்யும்போது சாலையில் மறுபடியும் பள்ளம் விழும். எனவே வடிகால் அமைப்பு பணியை விரைவாக முடித்து விட்டு சாலை விரிவாக்க பணிகளை முழுமையாக மேற்கொள்ளவேண்டும் என்பது பொதுமக்கள் கருத்தாக இருக்கிறது,
