கோவில்பட்டி அருகே கபடி போட்டி: பெங்களூரு, கோவை அணிகள் முதலிடம்

கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் தொகுதி குளத்தூர் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு குளத்தூர் ஜாலி பிரண்ட்ஸ் கபடி குழுவினர் சார்பில் 58-ஆம் ஆண்டு ஆண்கள், பெண்கள் கபடி போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். பெங்களூரு எம்.இ.ஜி., சென்னை ஐ.சி.எப்., சென்னை வருமான வரித்துறை, பேங்க் ஆப் பரோடா, சாய் சென்னை, தமிழ்நாடு போலீஸ், சவுத் சென்ட்ரல் ரெயில்வே, மதுரை கஸ்டம்ஸ், நாகர்கோவில் அலத்தங்கரை கபடி கிளப், திருநெல்வேலி துர்க்காம்பிகா கபடி கிளப் உள்ளிட்ட 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாளும் நடந்த போட்டியை காண ரசிகர்கள் திரண்டு வந்தனர். ஆரவாரம் செய்து போட்டிகளை ரசித்தனர். விறுவிறுப்பான முறையில் நடைபெற்ற இறுதி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த பெங்களூர் எம்.இ.ஜி. அணிக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் காமராஜர் நினைவு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த சென்னை வருமான வரித்துறை அணிக்கு ரூ.60 ஆயிரம், 3வது இடம் பிடித்த பேங்க் ஆப் பரோடா மற்றும் தமிழ்நாடு காவல்துறை அணிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த கோவை பி.கே.ஆர். கல்லூரி அணிக்கு ரூ.40 ஆயிரம், 2-வது இடம் பிடித்த ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வீ.கே.சி. அணிக்கு ரூ.20 ஆயிரம் 3 வது இடம் பிடித்த கபடி ஸ்டார் சென்னை, கர்நாடகா மைசூர் அணிக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
