கழுகுமலை பெண்கள் 2 பேரிடம் பண மோசடி; தந்தை- மகன் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு

கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை இந்திர பிரஸ்தம் தெருவில் வசித்து வருபவர் ராஜ் மனைவி செல்வி (வயது 31). அதே தெருவை சேர்ந்த சுதாகர் மனைவி சாந்தி (37). இருவரும் இளங்கலை பட்டயபடிப்பு முடித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்து வந்தனர்.
கழுகுமலையை சேர்ந்த ஆனந்தப்பன் மகன் சிவா (36) என்பவர், இதை தெரிந்து கொண்டு செல்வி, சாந்தி ஆகியோரை சந்தித்து , சென்னையில் வசிக்கும் தனது நண்பர் சுரேந்தர் (27) என்பவர் தலைமை செயலகத்தில் சுகாதார துறையில் வேலைபார்த்து வருவதாக, கூறி அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது சுரேந்தர், அரசு வேலை வாங்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ரூ.5 லட்சம் வீதம் 2 பேருக்கு ரூ.10 லட்சம் செலவாகும் என கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட சாந்தி மற்றும் செல்வி இருவரும் முன்பணமாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை சுரேந்தரிடம் கொடுத்தனர். ஆனால், சுரேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சாந்தியும், செல்வியும் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
அப்போது சுரேந்தர், திருச்சி மணச்சநல்லூர் உளுந்தங்குடியில்ல் வசித்து வரும் தனது தந்தை காத்தபிள்ளை (60) மூலம் பணத்துக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து சுரேந்தர், திருச்சி சமயபுரம் வங்கி பெயரில் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார். அதேபோல் சென்னை கொளத்தூரில் ஒரு வங்கி கிளை பெயரில் ரூ.3 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.
பின்னர் விசாரித்தபோது, சென்னை கொளத்தூரில் சுரேந்தர் குறிப்பிட்ட வங்கி கிளையே இல்லை என்பது தெரியவந்தது. அதேபோல் திருச்சி சமயபுரம் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் அந்த காசோலையும் திருப்பி வந்து விட்டது. இதனால் ஏமாந்து போன செல்வி, சாந்தி ஆகியோர் தங்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தாங்கள் மோசடி செய்யப்பட்டு விட்டதாக கழுகுமலை போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக சிவா மற்றும் சுரேந்தர், அவரது தந்தை காத்தபிள்ளை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
