• June 7, 2025

புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் பூஸ்டர் தடுப்பூசி-மக்களை தேடி மருத்துவம் முகாம்

 புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில்  பூஸ்டர் தடுப்பூசி-மக்களை  தேடி மருத்துவம்  முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் சூழ்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ஊராட்சி பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் ஒவ்வொரு பகுதியாக சென்று முகாம் நடத்தி தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இந்த பணி கடந்த 15-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது
இளையரசனேந்தல் ஆரம்ப சுகாதார மையம் சார்பில் நேற்று கோவில்பட்டி சுபா நகரில் முகாம் நடத்தப்பட்டது. இன்று புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் முகாம் நடைபெற்றது. அப்பனேரி ஊராட்சி தலைவர் சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் இங்குள்ள பூங்காவில் காலை 1௦ மணிக்கு முகாம் தொடங்கியது. குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கோலப்பன், கனகராஜ் மற்றும் உறுப்பினர்கள் மருத்துவ குழுவினரை வரவேற்று முகாம் ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.


இந்த பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆண்களும், பெண்களும் ஆதார் அட்டையுடன் வந்து தங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை பதிவு செய்தனர், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் வந்திருந்த மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.


முகாமிற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். எனவே பூஸ்டர் ஊசி போட்டுகொண்டனர், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு போஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. கோவிஷீல்டு போட்டவர்கள் அதிகம் பேருக்கு பூஸ்டர் ஊசி போடப்பட்டது. மாலை 4 மணி வரை முகாம் நடக்கிறது, பகல் 12 மணி வரை 7௦-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.


மக்களை தேடி மருத்துவம்
இந்த முகாமின் போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சுகாதார பணியாளர்களும் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சர்க்கரை, ரத்த அழுத்தம் பரிசோதனை செய்தனர். ஒவ்வொருவரின் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் அளவுகளை பதிவு செய்து கொண்டனர். மேலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
சர்க்கரை, ரத்த அழுத்த அளவு அதிகமாக இருந்தால் அவர்களை இளையரசனேந்தல் ஆரம்ப சுகாதார மையத்துக்கு வரசொல்லி டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. பகல் 12 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.

பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் விதமாக தொடங்கப்பட்ட திட்டம் தான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் இத்திட்டத்தின் கீழ் சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, முடக்குவாதம், பெண்களை கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் மற்றும் நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர், படுத்த படுக்கையாக மருத்துவமனைக்கு வர முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது வரை சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை 22 ஆயிரம் பேருக்கு செய்து உள்ளனர். அவர்களில் 2 ஆயிரம் பேர் மருந்து, மாத்திரைகள் பெற்று தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
தற்போது கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருவதால், கிராமப்புற செவிலியர்களும் இதில் பங்கேற்று பொதுமக்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் நடந்த முகாமில் பங்கேற்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *