• June 7, 2025

மனித உரிமை ஆணையத்தில் 8 போலீஸ் அதிகாரிகள் மீது டி.ஜெயக்குமார் புகார்

 மனித உரிமை ஆணையத்தில் 8 போலீஸ் அதிகாரிகள் மீது டி.ஜெயக்குமார் புகார்

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அவரது வீட்டிற்குள் போலீசார் நுழைந்து கைது செய்தது மனித உரிமை மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்டி டி.ஜெயக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பசுமை வழி சாலையில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று நேரில் சாட்சியம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின்போது தி.மு.க.வை சேர்ந்தவர்கள் நரேஷ் என்பவர் ஒரு சமூக விரோதி. அவர் மீது பல வழக்குகள். குறிப்பாக கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக அவரின் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் ஒன்றுசேர்ந்து ஜனநாயக முறையில் மக்கள் வாக்களிக்க வரும்போது, அவர்களை வாக்களிக்க விடாமல் தடுத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, வாக்கு சாவடி மையத்தை சூறையாடுவதுபோன்ற அத்தனை வேலைகளையும் செய்தவர்கள்.
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற கழகத்தின் முன்னோடி என்ற அடிப்படையிலே நாங்களும், எங்கள் கட்சியினரும் எங்கள் கடமையை செய்தற்கு பரிசு சிறைச்சாலை. பொய் வழக்குகள். அடுக்கடுக்கான பொய்வழக்குகள். கிட்ட தட்ட நான்கு வழக்குகள். 25 க்கு மேற்பட்ட இந்திய தண்டனை சட்ட பிரிவுகள். முதலில் தீவிரவாதிகள் அடைக்கப்படுகின்ற பூந்தமல்லி சிறையில் மூன்று நாட்களும், மீதி 17 நாட்கள் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டு, எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் ஒரு சித்திரவதையை செய்து இந்த அரசு ஆனந்தப்பட்டது.
உச்சநீதிமன்றம் ஒருவரைக் கைது செய்யவேண்டும் என்றால் அதற்காக வழிகாட்டு முறைகளை அளித்துள்ளது. அந்த உச்சநீதிமன்ற விதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு இரவு 8.30 மணிக்கு என்னை சாப்பிட விடவில்லை. மருந்து உட்கொள்ள விடவில்லை. உடையை மாற்ற விடவில்லை. எங்கு கொண்டுசெல்கிறோம் என்று சொல்லாமல் சென்னை முழுவதும் அலைய வைத்து அதன்பிறகு இரவு 2.30 மணிக்கு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்படுகிறேன். இது அத்துமீறிய செயல். மனித உரிமைகள் முழுமையாக மீறப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தேன்.இதுபோல மத்திய உள்துறைக்கும் புகார் அளித்திருந்தேன். அவர்கள் அறிக்கை கேட்டுள்ளார்கள்.

இந்த புகார் மீது தமிழக உள்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று எனக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும், மத்திய உள்துறைக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று டி.ஜி.பி.க்கும்,கமிஷனருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கான பதில் இன்னும் வரவில்லை. இங்கே மனு அளித்ததின் அடிப்படையிலே சாட்சிகளை இன்று பதிவு செய்துள்ளார்கள். நடந்த அனைத்தையும் இங்கு தெரிவித்துள்ளேன். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல்,முறையாக தகவல் தெரிவிக்காமல் கைது நடவடிக்கையில் ஒரு அத்துமீறல் நடந்துள்ளது. பொய் வழக்கு போட்டுள்ளார்கள் என்று உரிய காரணத்தைக் குறிப்பிட்டு,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
சுந்தரவதனம் (காவல் துணை ஆணையர்). ரவி (காவல் ஆய்வாளர்).பூபாலன் ( காவல் ஆய்வாளர்). சங்கர நாராயணன் (காவல் ஆய்வாளர்). பாலசுப்பிரமணியன் ( துணை ஆணையர் மத்திய குற்றப்பிரிவு). அனந்தராமன் ( காவல் உதவி ஆணையர் மத்திய குற்றப்பிரிவு). பிரபா (காவல் ஆய்வாளர் மத்திய குற்றப்பிரிவு). தனஞ்செயன் ( காவல் உதவி ஆய்வாளர்) ஆகிய 8 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் புகார் அளித்துள்ளேன்.
1991 ம் ஆண்டிலிருந்து அரசியலிலிருந்து வருகிறேன். இதுவரை எந்த ஒரு வழக்கும் கிடையாது. இப்படி நான் பொதுவாழ்க்கையில் இருக்கும் நிலையிலே வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு,சமூகத்தில் இப்படிப்பட்டவர்களுக்கே இதுபோன்ற நிலை என்றால் ஒரு சாதாரண குடிமகனுக்கு எந்த அளவுக்கு நிலைமை இருக்கும் என்பதை பாருங்கள். எனவே ஒரு படிப்பினையை அவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும். இதன் மூலம் மற்ற யார் மீது அவர்களை கைவைக்கக் கூடாது. கழகத்தினர் மீது பொய்வழக்கு போடக்கூடாது என்ற அடிப்படையில்தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதன் மீது மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *