அரசு பள்ளிகளுக்கு 4 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், 7 கணினிகள்

கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரத்தில் ஜே.எஸ். டபிள்யூ. எனர்ஜி லிமிடெட் பவுண்டேஷனின் சமூக பங்களிப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி லிமிடெட்டின் தூத்துக்குடி தலைமை நிர்வாகி தென்னவன் தலைமை தாங்கினார். சமூகப் பங்களிப்பு நிதி உதவி திட்ட மண்டல நிர்வாகிகள் பாரதி, சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ. 10 லட்சம் மதிப்பில் குளத்தூர், சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள், எட்டயபுரம் பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் விடுதி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றுக்கு 4 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்களையும், வேப்பலோடை, எட்டயபுரம், புதூர், குளத்தூர், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 7 கணினிகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நவநீத கண்ணன், மும்மூர்த்தி, ராமசுப்பு, முன்னாள் நகர செயலர் சங்கர பாண்டியன், பேரூர் கழக செயலர்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தி.மு.க. நிர்வாகிகள் மணிகண்டன், அருள் சுந்தர், வைரமுத்து, சாமி சுப்புராஜ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
