சினிமா பார்க்க வந்த தம்பதியை வழிமறித்து நகை பறிப்பு

கோவில்பட்டி அருகே உள்ள நாகம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் சிவராமச்சந்திரன் (வயது 29). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சிவராமச்சந்திரன் தனது மனைவி வசந்தகுமாரி மற்றும் 2 மகன்களுடன் கோவில்பட்டியில் உள்ள, தியேட்டரில் சினிமா பார்க்க வந்தார். சினிமா முடிந்து இரவு 10 மணி அளவில் ஊருக்கு மனைவி, மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.
கரிசல்குளம் அருகே சென்றபோது 4 மர்ம நபர்கள் திடீரென்று அரிவாள், கம்புகளுடன் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். அரிவாளை காட்டிய மிரட்டிய அவர்கள், வசந்தகுமாரி அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, 5 கிராம் எடையுள்ள கம்மல், காது மாட்டி ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த துணிகர வழிப்பறி சம்பவம் குறித்து சிவராமச்சந்திரன் கொப்பம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்- இன்ஸ்பெக்டர் துரைசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
