மது போதையில் மகன்; தட்டிக்கேட்ட தந்தை அடித்துக் கொலை

கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் கீழகாலனியை சே ர்ந்தவர் சுப்பையா (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி காளியம்மாள் (70). இவர்களுக்கு கனகராஜ் (45), ஜெயக்குமார் (42) ராமநாதன் (38) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். ஜெயக்குமார், முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
கடந்த 15-ந்தேதி இரவில் ஜெயக்குமார் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு சென்று தாயார் காளியம்மாளிடம் தகராறு செய்தார். இதனை தந்தை சுப்பையா கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயக்குமார் இரும்பு கம்பியால் தந்தை சுப்பையாவை சரமாரியாக தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த சுப்பையாவை குடும்பத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுப்பையா நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
