கிணற்றில் தூர் வாரும்போது கல் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி

கோவில்பட்டி அருகே ஜமீன்தேவர்குளத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணறு தூர்வாரும் பணி நடந்தது. இந்த பணியில் திருவேங்கடம் அருகே குலசேகரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் வயது உள்பட 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் மாலை பாலகிருஷ்ணன் கிணற்றுக்குள் இறங்கி, அங்கு தோண்டிய பாறைகள், மண்ணை வெளியே தூக்கி விடும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் இருந்த கல் எதிர்பாராதவிதமாக பாலகிருஷ்ணன் மீது சரிந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். உடனே அவரை வேனில் ஏற்றி சிகிச்சைக்காக கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இதையடுத்து அவரது உடலை சொந்த ஊரான குலசேகரன்கோட்டைக்கு கொண்டு சென்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் மற்றும் போலீசார் குலசேகரன்கோட்டைக்கு சென்று பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பாலகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கிணறு தூர்வாரும் பணி நடைபெற்ற தோட்ட உரிமையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பாலகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதாக தெரிவித்தார்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பாலகிருஷ்ணனின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர். இறந்த பாலகிருஷ்ணனுக்கு கனகரத்தினம் (42) என்ற மனைவியும், ஜெயபால் (23), சீனு (15) ஆகிய 2 மகன்களும், கனக பாரதி (17) என்ற மகளும் உள்ளனர்.
