காதலுக்கு உதவி செய்தவர் வெட்டிக்கொலை; 2 பேர் கைது

மதுரை எம்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் வெற்றி செல்வன் (வயது 17). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, கல்லூரியில் இருந்து வெற்றி செல்வன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் அவர், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 30-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற வெற்றி செல்வன் திரும்பி வராமல் மாயமானார்.
இதுகுறித்து அவருடைய தாயார் ராணி அளித்த புகாரின்பேரில், மதுரை அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். வெற்றி செல்வனின் நண்பரான மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தனது தங்கையை ஒருதலையாக காதலித்தவருக்கு வெற்றி செல்வன் உடந்தையாக செயல்பட்டார். எனவே வெற்றி செல்வனை எனது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே கயத்தாறு அடுத்த வெள்ளாளங்கோட்டைக்கு நைசாக பேசி அழைத்து சென்று, அங்கு அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து, உடலை அங்குள்ள கிணற்றில் வீசியதாக தெரிவித்தார்.
இதற்கு கமுதி வேப்பங்குளத்தை சேர்ந்த மற்றொரு நண்பரும் உடந்தையாக இருந்ததாக கூறினார். இதையடுத்து நண்பர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் வெள்ளாளங்கோட்டைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் வெற்றிசெல்வனை கொலை செய்து, உடலை வீசிய கிணற்றை அடையாளம் காட்டினர். அந்த கிணற்றில் தண்ணீரில் அழுகிய நிலையில் மிதந்த வெற்றி செல்வனின் உடலை போலீசார் மீட்டனர். வெற்றி செல்வனின் உடல் அழுகி சிதைந்ததால் தலைப்பகுதி கிடைக்கவில்லை. எனவே கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். தொடர்ந்து கிணற்றின் அடியில் கிடந்த வெற்றி செல்வனின் தலைப்பகுதியையும் கைப்பற்றினர். வெற்றிசெல்வனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
