பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது; பரபரப்பு வாக்குமூலம்

கைதான தர்மர்
கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு அருகே பன்னீர்குளம் தென்னம்பட்டி காட்டுப்பகுதியில் கடந்த 15-ந்தேதி பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கடம்பூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் சிவகங்கை மாவட்டம் வலையூரான்பட்டியை சேர்ந்த ராஜாமணி என்பவர் மனைவி சித்ரா (வயது 45) என்பதும், அவரை கயத்தாறு அருகே தென்னம்பட்டி கோபாலபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற தர்மர் (55), தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தர்மரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் எனக்கும், சித்ராவுக்கும் செல்போனில் மிஸ்டுகால் மூலம் பழக்கம் ஏற்பட்டது. சித்ராவின் கணவர் ராஜாமணி, கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். அவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அடிக்கடி செல்போனில் பேசி வந்த எங்களுக்கு இடையே நாளடைவில் நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலானது.
சித்ரா அவ்வப்போது இரவில் பஸ்சில் கயத்தாறு சுங்கச்சாவடிக்கு வருவார். அவரை நான் மோட்டார் சைக்கிளில் கயத்தாறு அருகே பன்னீர்குளம் தென்னம்பட்டி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருப்பது வழக்கம். பின்னர் அதிகாலையில் மீண்டும் சித்ராவை மோட்டார் சைக்கிளில் கயத்தாறு சுங்கச்சாவடிக்கு அழைத்து சென்று, பஸ்சில் ஏற்றி அவரது ஊருக்கு வழியனுப்பி வைப்பேன்.
சித்ராவுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, அவரிடம் அவ்வப்போது செலவுக்கு பணம் கேட்டேன். அவரும் பணம் தந்து உதவினார். சித்ராவின் கணவர் ராஜாமணி வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தையும் சித்ரா தந்தார். மொத்தம் ரூ.10 லட்சம் வரையிலும் சித்ராவிடம் இருந்து பணத்தை வாங்கினேன். இந்த நிலையில் ராஜாமணி வெளிநாட்டில் இருந்து விரைவில் சொந்த ஊருக்கு திரும்பி வருவதாகவும், எனவே பணத்தை திருப்பி தருமாறும் சித்ரா என்னிடம் கேட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நான் பணத்தை திருப்பி கொடுக்காமல், அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி சித்ராவை வழக்கம்போல் கயத்தாறுக்கு வருமாறும், அங்கு காட்டுப்பகுதியில் உல்லாசமாக இருந்து விட்டு, பணத்தை திருப்பி தருவதாகவும் கூறினேன். இதனை உண்மை என்று நம்பிய சித்ராவும் சம்பவத்தன்று இரவில் பஸ்சில் கயத்தாறு சுங்கச்சாவடிக்கு வந்தார். அங்கிருந்து அவரை மோட்டார் சைக்கிளில் பன்னீர்குளம் தென்னம்பட்டி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றேன்.
அங்கு நாங்கள் உல்லாசமாக இருந்த பின்னர் சித்ரா அயர்ந்து தூங்கினார். அப்போது அங்கு ஏற்கனவே மறைத்து வைத்திருந்த பெரிய கல்லை எடுத்து சித்ராவின் தலையில் தூக்கிப்போட்டு கொலை செய்தேன். நாங்கள் உல்லாசமாக இருந்த போர்வையிலேயே சித்ராவின் உடலை சுற்றி காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்றேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் தர்மர் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
