`புல்லட்’ கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர்

தூத்துக்குடி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த ஜெயசுந்தர் (வயது 50) என்பவர் அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் லயன்ஸ் டவுன் ஜங்ஷன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது புல்லட்டில் வந்த மர்ம நபர்கள் ஜெயசுந்தரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து ஜெயசுந்தர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்த ஆதிமூலம் மகன் முருகன் (எ) ஓட்டப்பல் முருகன் (24) மற்றும் பாஞ்சாலங்குறிச்சி பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மகேந்திர குமார் (24) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஜெயசுந்தரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
உடனே முருகன் (எ) ஓட்டப்பல் முருகன் மற்றும் மகேந்திர குமார் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ 1,42,000/-, ரூ 12,000/- மதிப்புள்ள செல்போன் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைதான இருவரும் எப்ப்போதும் புல்லட் மோட்டார் சைக்கிளில் சென்றுதான் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவார்களாம். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*
கைது செய்யப்பட்டவர்களில் முருகன் (எ) ஓட்டப்பல் முருகன் மீது ஏற்கனவே தென்பாகம், ஓட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் 12 வழக்குகளும்,மகேந்திர குமார் மீது கழுகுமலை, ஓட்டப்பிடாரம் மற்றும் பசுவந்தனை ஆகிய காவல் நிலையங்களில் 6 வழக்குகளும் உள்ளது குறிப்பிடதக்கது.
