மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் : வைரலாகும் வரவேற்பு டீசர்

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் இந்த ஆண்டு சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் 2022 சதுரங்கப் போட்டியில் தமிழகத்தில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 1977ஆம் ஆண்டு முதல் இப்போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட் சர்வதேச போட்டிகளில் ஒரு முறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை. ஆனால் தற்போது 44வது சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு செஸ் ஒலிம்பியாட் 2022 தற்போது இந்தியாவில் அதிலும், தமிழகத்தின் தலைநகர் சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் பல்வேறு துறைகளின் முதன்மை செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
180 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு.10ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஆய்வு கூட்டங்களை ஒருங்கிணைப்புக்குழு மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் சென்னை வருகிறார்,
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பாக 40 வினாடிகள் ஓடக்கூடிய வரவேற்பு டீசர் தயாரித்து வெளியிடப்படுள்ளது. இதில் மாமல்லபுரம் பின்னணியில் பெண்கள் நடனம் ஆடுவது போலவும், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வருவது. இருகரம் கூப்பி வரவேற்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவரும் பாடுவது போல் காட்சி வருகிறது. இந்த டீசரை நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
