கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் பிரசாதம்-அன்னதான உணவிற்கு சுகாதார தர சான்றிதழ்

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் தென் பழனி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற குடவரை கோவிலான கழுகாசலமூர்த்தி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதான உணவு வகைகளின் தரம், உணவு தயாரிக்கும் முறை, வழங்கும் முறை மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களின் சுகாதாரம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணைத்தியத்தினால் போக் (BHOG) சான்றிதழ் என்று அழைக்கப்படும் சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார தர சான்றிதழை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கோவில் செயல் அலுவலர் கார்த்தீஸ்வரனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன், கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகலை பிரியா, தாசில்தார் சுசீலா,கயத்தார் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-
கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் அன்னதானம் மற்றும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் ஆகியவை தரமாக உள்ளது என்பதனை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் ஆய்வு செய்து போக் சான்றிதழ் என்று அழைக்கப்படும் சுகாதார சான்றிதழ் வழங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 12 கோவில்களுக்கு இந்த சுகாதாரச் சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது. அதே போன்று தனியார் நிறுவனங்களுக்கும் இச் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்து அவர்களுக்கும் வாங்கிக் கொடுத்துள்ளோம்.
முறையாக உணவு பொருட்கள் தயாரிப்பு முறை, வழங்கும் முறை, உணவு தர சான்றிதழ் என எல்லாவற்றையும் ஆய்வு செய்த பின்னர் தான் சுகாதார சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
