• June 8, 2025

ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க.வில் சேர்ந்தால் எங்களுக்கு கவலையில்லை; டி.ஜெயக்குமார் அதிரடி பேட்டி

 ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க.வில் சேர்ந்தால் எங்களுக்கு கவலையில்லை; டி.ஜெயக்குமார் அதிரடி பேட்டி

சென்னையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு.

கேள்வி:- சேலம் பெரியார் பல்லைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுக்கான கேள்வியில் நான்கு சாதிகளைக் குறிப்பிட்டு இதில் எந்த சாதி தாழ்ந்த சாதி என்று கேட்டுள்ளார்களே
?
பதில்.:-.இதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஜாதி, மதம், மொழி இவை அனைத்தையும் கடந்தது தான் கல்வி நிறுவனமாக இருக்கவேண்டும். அது எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி. உயர்க்கல்வித்துறை எந்த அளவுக்கு அக்கறை இல்லாத இருக்கிறது என்பதற்கு இது உதாரணம். ஒரு கேள்வி தாளில் ஜாதியை குறிப்பிட்டு, அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கின்றவர்களை அவமானப்படுத்தவேண்டும் என்பதற்காக இந்த கேள்விகளை எழுப்பியது என்பது அமைச்சர் பொறுப்பு வகிப்பவருக்கு தெரியாதா. துறையில் கவனம் செலுத்தவில்லை என்பதை தான் இது காட்டுகிறது. வளர்ந்த இந்த சமுதாயத்தில் இதுபோன்ற கேள்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. இது எல்லோரின் கண்டனத்துகுறிய செயலாகத்தான் இருக்க முடியும். இப்போது அவர்கள் கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவில்லை என்று சொல்கிறார்கள். வேறு மாநிலம் தயாரித்தது என்று சொல்கிறார்கள். தயாரித்தாலும் இதனை யார் பார்ப்பது. உயர் கல்வித்துறை என்ன செய்கிறது. பொறுப்பைத் தட்டி கழிக்கலாமா. பொறுப்புகளைத் தட்டி கழிக்காமல் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதுதான் புத்திசாலியான அரசுக்கு அடையாளமாக இருக்கும்.
கேள்வி:-.உங்கள் தரப்பில் பலபேரை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்குகிறார். ஓ.பன்னீர்செல்வம் நீங்கள் உள்பட பலரை நீக்குகிறார். என்ன நடக்கிறது இங்கே.
பதில்.:- அந்த கடிதத்தை பார்த்தீர்களா. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, உடன் யாரும் இல்லாத சூழ்நிலையிலே அவர் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. அந்த கடிதத்தில் சென்ற வருடம் நீக்கியுள்ளதாக இருக்கிறது. இதைக்கூடக் கவனிக்கவில்லை என்று பார்க்கின்றபோது அவர் மனம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.
கழகம் என்பது ஒரு மாபெரும் இயக்கம். பொதுக்குழு ஒன்றுகூடி 99 சதவீத அளவிற்கு எடப்பாடியார் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தனது கடமையை செய்துவருகிறார். நீக்குவதற்குரிய அனைத்து அதிகாரம் எங்களிடம் உள்ளது. ஒபிஎஸ் தரப்பிற்கு அதிகாரம் இருக்கிறது என்று சொல்வதை கேலிக் கூத்தான விஷயமாகத்தான் பார்க்க முடியும்.
கேள்வி:- சர்வாதிகாரி போல எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்றும், ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் நீக்கிவிட்டார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாரே

பதில்:- தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று சொல்வார்கள். ஒன்னே ஒன்று கண்ணே என்று சொல்கிறார். அவரை நீக்கும்போதுகூட பொங்கவில்லை. அவர் மகனை நீக்கும்போது வெடித்துவிட்டார். பாராளுமன்ற தொகுதியில் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெறவேண்டிய வேலையைதான் பார்த்திருக்கவேண்டும். மகன் மட்டும் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணம்தானே அவருக்கு இருந்தது. அவர் மகனை நீக்கியதற்கு மட்டும் பொங்குகிறார்.

கேள்வி:- முரசொலியில் ரவீந்தரநாத் குறித்து கட்டுரை வந்த காரணத்தினால் அவர் நீக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறதே

பதில்.:-கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும்போது கட்சி நடவடிக்கை எடுக்கிறது. கட்சியின் கொள்கைக்கு மாறாகத்தானே அவர் நடவடிக்கை இருக்கிறது.

கேள்வி:-வரக்கூடிய நாட்களில் பா.ஜ.க.வை நீங்கள் தீவிரமாக எதிர்ப்பீர்களா.

பதில்:- தனித் தன்மை எப்போதும் கழகத்திற்கு உண்டு. அந்த தனி தன்மையை என்றைக்கு கழகம் இழக்காது. உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்.

கேள்வி:- .பன்னீர்செல்வம் மனம் திருந்தி வந்தால் சேர்த்துக்கொள்ளப்படுவாரா?

பதில்:- அவரால் கட்சியினருக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டது. கட்சிக்கு விரோதமான நீதிமன்றத்திற்கு சென்றது. உட்கட்சி விவாகரத்தில் கட்சியில் பேசுவதை விட்டுவிட்டு நீதிமன்றத்தையே ஒரு கருவியாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று குட்டு குட்டினார்கள் அல்லவா. நீதிமன்றமே இப்படிச் சொல்லும்போது எப்படி அடிமட்ட தொண்டன் ஏற்றுக்கொள்வான். எதையும் இந்த நேரத்தில் எதுவும் சொல்ல முடியாது.

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வுக்கு வந்தால் வரவேற்போம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளாரே

பதில்:-.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் அவர் கட்சியில் இல்லை. அவர் எந்த கட்சிக்குச் சென்றால் என்ன?நரி வடம் போனால் என்ன இடம் போனால் என்ன. எங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை. அவர் எந்த கட்சிக்கும் போகலாம். அவரின் உரிமையில் நான் தலையிட முடியாது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *