கேரளாவுக்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசி சிக்கியது; கோவில்பட்டியில் சரக்கு ஆட்டோவுடன் டிரைவர் கைது

கோவில்பட்டி பல்லாக்கு ரோடு பகுதியில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆட்டோவில் இருந்த டிரைவரான கோவில்பட்டி பல்லாக்கு சாலையை சேர்ந்த மாதவன் மகன் தாமசை (வயது 26) பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரேஷன் அரிசி மூட்டைகளை மதுரை வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு ஆட்டோவுடன் 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மேற்கு போலீசார், டிரைவர் தாமசை கைது செய்தனர். பின்னர் அவரையும், பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ, ரேஷன் அரிசி மூட்டைகளையும் தூத்துக்குடி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாமசுக்கு பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது.
