மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய 3 பேர் சிக்கினர்
தூத்துக்குடி முத்தையாபுரம் முள்ளக்காடு, ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த பெருமாள் (39) என்பவர் சிவந்தாகுளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 29.6.2022 அன்று இரவு கடையின் பூட்டை உடைத்து ரூ. 30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அதேபோன்று அன்றைய தினமே பிரையண்ட் நகர் 3-வது தெருவில் பரமேஸ்வரன் (54) என்பவரின் மளிகை கடையிலும் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம், ரூ 2,000 ஆயிரம் மதிப்புள்ள கைகடிகாரத்தையும் திருடி சென்றனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் நேற்று (30.6.2022) அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராம்குமார் (22), அழகேசபுரம் மெயின் ரோடு பாண்டியராஜ் மகன் பாஸ்கர் (23), 2வது ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த முத்து மகன் செல்வராஜ் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து மேற்படி மளிகை கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.
உடனடியாக தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் மேற்படி 3 பேரையும் கைது செய்து 2 கடைகளிலும் திருடப்பட்ட பணம் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதானவர்களில் ராம்குமார் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் மற்றும் மத்தியபாகம் காவல் நிலையங்களில் 4 வழக்குகளும், செல்வராஜ் மீது தென்பாகம் மற்றும் வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் 4 வழக்குகளும், பாஸ்கர் மீது வடபாகம் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.