ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேலமுடிமண் பகுதியை சேர்ந்த லெட்சுமணபெருமாள் மகன் கார்த்திக் (வயது 23) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக 27.5.2022 அன்று கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது சகோதரரான செல்வக்குமார் (25) என்பவரை ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் அறிக்கை அளித்தார்.
கடந்த 5.6.2022 அன்று கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைத்தாவூர் பகுதியில் மந்திரம் (60) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான சந்தனகுமார் (எ) குமார் (33) என்பவரை கயத்தார் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து அறிக்கை அளித்தார்.
️கடந்த 11.6.2022 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரோக்கியபுரம் பகுதியில் ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாகா ஆத்தூர் தலைவன்வடலி பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் மகன் மதன் (23) போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் அறிக்கை அளித்தார்
கடந்த 24.5.2022 அன்று கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா கடத்தியதாக தச்சநல்லூரை சேர்ந்த தங்கசாமி மகன் தங்கராஜ் (25) உள்பட 3 பேரை போலீசார் கைதுசெய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதில் முக்கிய எதிரியான தங்கராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் ராணி அறிக்கை அளித்தார்.
இதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து குறிப்பிட்ட 4 பேர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் 4 பேரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 28 பேர் உட்பட மொத்தம் 119 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
