அ.தி.மு.க.வில் பூகம்பத்தை ஏற்படுத்திய ஒற்றை தலைமை முறை
![அ.தி.மு.க.வில் பூகம்பத்தை ஏற்படுத்திய ஒற்றை தலைமை முறை](https://tn96news.com/wp-content/uploads/2022/06/download-2-5.jpg)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
வருகிற 23-ந் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழு பற்றி ஆலோசிக்க கூடிய இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல ஒற்றைத்தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதே கருத்தை வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலோர் வலியுறுத்தி பேசினார்கள்.
இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை அ.தி.மு.க.வில் தற்போது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வலியுறுத்தும் 80 சதவீத அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். அவர்கள் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யலாம் என்று சம்மதித்துள்ளனர்.
இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும், ஓ.பன்னீர்செல்வம் அன்று இரவு தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். அதுபோல எடப்பாடி பழனிசாமியும் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
நேற்று 2-வது நாளாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை முறையை கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இதற்காக நேற்று ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் இருவரும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துடனும் அவரது ஆதரவாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒற்றைத் தலைமை முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களை எடப்பாடி ஆதரவாளர்களால் சமரசம் செய்யவே இயலவில்லை.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் புதிய சமரச திட்டம் ஒன்றை வகுத்தனர். அதன்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் பதவி மற்றும் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவி ஆகிய 2 முக்கிய பதவிகளையும் கொடுக்க முடிவு செய்தனர். இந்த புதிய சமரச திட்டம் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது. இந்த பசமரச திட்டத்தை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துவிட்டால் தனது முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார். எனவே தற்போது இருக்கும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டு கொடுக்க அவர் விரும்பவில்லை. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து செயல்பட விரும்புவதாக ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட கூறியுள்ளார்.
மேலும் அவர் அ.தி.மு.க. நிர்வாகத்தில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என்று கறாராக கூறி வருகிறார். அவரது மனதை மாற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இன்று மதியம் வரை வெற்றி கிடைக்கவில்லை. என்றாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களது முயற்சியை கைவிடவில்லை. இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அ.தி.முக.வில் ஒற்றைத் தலைமை முறையை கொண்டுவந்து விட வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளும் முயற்சிகளால் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் கோபம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் சென்னை, தேனி உள்பட பல்வேறு இடங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இது அ.தி.மு.க.வில் சர்ச்சையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்துள்ளதால் சில மூத்த தலைவர்கள் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளனர். பெரும்பாலான தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி இடையே சமரசத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பொதுக்குழுவுக்கு முன்னதாக இந்த விவகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களில் சிலர் ஆலோசனை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று கோரி சிலர் கோர்ட்டுக்கு செல்லவும் ஆலோசித்து வருகிறார்கள்.
அப்படி கோர்ட்டுக்கு சென்றால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் இடையே மேலும் கருத்து வேறுபாடுகளை அதிகரிக்க செய்து பிளவுக்கு கொண்டு சென்று விடுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)