புகையிலை பொருட்கள் விற்பனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 38 கடைகளுக்கு `சீல்’

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எல். பாலாஜி சரவணன் அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 178 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 38 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் மத்தியபாகம், தென்பாகம், தெர்மல்நகர், சிப்காட், ஆத்தூர், குலசேகரப்பட்டினம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி மேற்கு, கோவில்பட்டி கிழக்கு, கயத்தாறு மற்றும் குளத்தூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் 15 பெட்டிக் கடை மற்றும் டீக்கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு “560 கூல்லிப்ஸ்” பாக்கெட்டுகள் உட்பட 930 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
