போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 88 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை சம்மந்தமாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுடன் இன்று (6.06.2022) மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமான போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்கத் தவறும் சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டு இதுவரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 74 வழக்குகள் பதிவு செய்து, 115 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூபாய் 7,74,500/- மதிப்புள்ள 77 ½ கிலோ கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் 1,43,600/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 21 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று 55 கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட மொத்தம் 88 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 54 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 27 பேர் உட்பட மொத்தம் 110 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்
