தூத்துக்குடியில் காவலர்கள் நல்வாழ்வு பயிற்சி முகாம்
![தூத்துக்குடியில் காவலர்கள் நல்வாழ்வு பயிற்சி முகாம்](https://tn96news.com/wp-content/uploads/2022/06/6291eef0-9f0b-4ef6-8dcd-1d333e87a354-Copy.jpg)
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை 45 பேருக்கு 2 நாட்கள் ‘காவலர்கள் நல்வாழ்வு பயிற்சி முகாம்” இன்று (4.6.2022) தொடங்கியது, பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மனிதர்களின் வாழ்க்கை பயணத்தில் வெற்றி தோல்விகள் மாறி மாறி வரக்கூடியது. அதை சரி சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனபக்குவம் நமக்கு வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயந்து, தவறான வழிகளில் செல்லாமல், அதை தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அனுபவங்களே உங்களை சிறந்தவர்களாக மாற்றும்.
நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். உங்களால் முடிந்த அளவில் பிறருக்கு நன்மை செய்யுங்கள். பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி உங்கள் உடலை மட்டுமல்லாமல் மனதிற்கும் ஆரோக்கியமானதாகும். நீங்கள் ‘மாற்றத்தை உருவாக்க கூடியவர்களாக” உங்களை மாற்றிக் கொள்ள இந்த பயிற்சியினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த காவல் பணியை மக்களுக்கு சேவை செய்வதற்காக நமக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாக கருதவேண்டும். அதே சமயம் நம்மையும், நமது குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள இந்த நல்வாழ்வு பயற்சியினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சி முகாமில் தூத்துக்குடி மனநல மருத்துவர் டாக்டர். சிவசைலம் , சமூக ஆர்வலர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தையும், நல்வாழ்வு வாழ்வதற்கான ஆலோசனைகளையும் கூறினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து தலைமையில் காவலர்கள் செய்திருந்தனர்.
தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மணிகண்டன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)