27 இளஞ்சிறார்கள் ஓட்டிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; பெற்றோர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
தூத்துக்குடியில் காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் 27 பேர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேற்படி இளஞ்சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கி 18 வயது நிறைவடையாமல் வாகனம் ஓட்டக் கூடாது என்று எச்சரித்தார். மேலும் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக போலீஸ் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவது 199 (a)ன் படி குற்றமாகும். மீறினால் மேற்படி இளஞ்சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது. வாகனம் ஒரு வருட காலம் சிறை பிடிக்கப்படும். பெற்றோர்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதமும், 3 வாரம் முதல் 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.