அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தின் அருகே உள்ள பெருமாள் கோவில் வட்டம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் பல ஏக்கர் உள்ளது. வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் ஏரிக்கரை பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டியிருக்கும் நபர்களுக்கும், தும்பேரி பகுதியை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கும், பெருமாள் கோவில் வட்டத்தில் இடம் ஒதுக்க வருவாய்த்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இதனை அறிந்த கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு இப்பகுதியில் இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். கால்நடை மற்றும் இதர வகை பயன்பாட்டிற்கு போதிய இடம் இல்லாத நிலையில் வெளியூர் நபர்களுக்கு இங்கு இடம் ஒதுக்கக் கூடாது எனக்கூறி வந்தனர்.
இந்த நிலையில் மதனாஞ்சேரி கிராம மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வாணியம்பாடி கூட்ரோட்டில் திடீரென அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்ததும் வாணியம்பாடி தாசில்தார் சம்பத், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது இது தொடர்பாக எழுத்து மூலம் கோரிக்கை கொடுத்தால் மேலதிகாரிகளிடம் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.