பாமகவில் இருந்து அன்புமணி நீக்கமா? டாக்டர் ராமதாஸ் பதில்

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நடப்பாண்டில் ஆகஸ்ட் 10ம் தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்தப்படும். பாமகவின் மகளிர் மாநாட்டில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

46 வருடங்களாக பாமகவை நான் தான் இயக்கி வருகிறேன். என் பின்புலத்தில் இருந்து யாரும் இயக்கவில்லை. என்னை யாரும் இயக்க முடியாது. என் பொதுவாழ்வு மிக நீண்ட பயணம் கொண்டது. கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை 46 ஆண்டுகளாக பயணித்துள்ளேன்.

பாமகவுக்கு நிர்வாகிகள் சிலர் வருவாங்க… சிலர் போவாங்க.. பாமக பொருளாளர் பதிவியில் சிறுபான்மையினரை நியமிக்கவே திலகபாமாவை நீக்கினேன்.
தந்தை, மகன் பிணக்கால் நிர்வாகிகளிடம் எந்த குழப்பமும் இல்லை. ஒவ்வொரு கட்சியிலும், குடும்பத்திலும் நடப்பதுதான் பாமகவிலும் நடக்கிறது. இந்த விவகாரத்தை நாங்களே பெரிதுபடுத்தவில்லை. பாமக நிர்வாகிகள் நியமனம், நீக்கம் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம். சுதந்திரமாக செயல்படுவது அன்புமணியின் உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து பாமகவில் நிர்வாகிகளை தலைவர் பொறுப்பில் உள்ள தன்னால் மட்டுமே நீக்க முடியும் என அன்புமணி கூறியிருந்தது தொடர்பான கேள்விக்கு “சட்ட விதிகளை இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு நாளை சொல்கிறேன்” என ராமதாஸ் கூறினார்
பின்னர் ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு நிகழுமா என்ற கேள்விக்கு, உலகில் பல அதிசயங்கள் நடப்பதாகவும், அது எப்போது எப்படி நடைபெறும் என சொல்ல முடியாது என்றும் பதிலளித்தார்.

அதனை தொடர்ந்து பாமகவில் இருந்து அன்புமணி நீக்கமா..? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு “வியாழக்கிழமை தெரிவிப்பதாக ராமதாஸ் பதில் அளித்தார்”.
