256 வது பிறந்த நாள் :வீரன் வெள்ளையத்தேவன் சிலைக்கு ஆட்சியர் இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் 256வது பிறந்த நாள் விழா இன்று (31.5.2025) கொண்டாடப்பட்டு வருகிறது.
தீரம் மிக்க வீரன் வெள்ளையத்தேவனை வீரபாண்டிய கட்டபொம்மன் தனது தளபதியாக மட்டுமல்லாமல் மகனாகவும் நினைத்துப் போற்றினார். வெள்ளையர்கள் வீரபாண்டியரிடம் கப்பம் கேட்டு வந்தபோது முதலில் சீறிப் பாய்ந்தது வெள்ளையத்தேவன்தான்.

பானர்மேன் என்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு படையெடுத்து வந்தான். போர் தொடங்கியது. வெள்ளையத்தேவன் சுழன்று சுழன்று ஆங்கிலேயர்களை வேட்டையாடிக் கொன்றான்.
கோட்டையை பலமாக காவல் காத்தான். இவனது வீர ஆவேச தாக்குதலை கண்ட தளபதி பானர்மேன் போர் முடிவதாக அறிவித்துவிட்டுப் பாசறைக்கு திரும்பினார்.

போர் முடிந்து விட்டது என்று நினைத்து கோட்டையின் மீது நின்று தன் படைகளுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்த வெள்ளையத்தேவனை ஒரு ஆங்கிலச் சிப்பாய் போரின் நெறிமுறைகளுக்கு மாறாகச் சுட்டுவிட்டான்.
இதைச் சற்றும் எதிர்பாராத வெள்ளையத் தேவன் கோட்டையிலிருந்து கீழே விழுந்து மடிந்தார். வெள்ளையத்தேவனைச் சுட்டுக்கொன்றவனை, அவரது மனைவி வெள்ளையம்மாள் குத்திக் கொன்றுவிட்டு வெள்ளைத்தேவனின் சாவுக்குப் பழி தீர்த்துக் கொண்டாள்.

வீரமிக்க போர்படைத்தளபதியாக திகழ்ந்த வீரன் வெள்ளையத்தேவனின் வீரத்தினை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு வல்லநாட்டில் ழுழுஉருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வீரன் வெள்ளையத்தேவன் பிறந்த நாளான மே 31ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று நடைபெற்ற விழாவில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வீரன் வெள்ளையத்தேவன் வாரிசுதாரர்கள் சி.ஆறுமுகம், ஏ.மாரிமுத்து ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (மு.கூ.பொ.) போ.முத்துக்குமார், திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னாசங்கர், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர், பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
