வைகோவுக்கு திமுக மாநிலங்களவை சீட் கொடுக்காதது வருத்தம், வேதனை அளிக்கிறது; துரை வைகோ பேட்டி

ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வைகோ 1978-ம் ஆண்டு 34-ம் வயதில் பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பணியாற்றி உள்ளார். நதி நீர் இணைப்பு குறித்து யாரும் சிந்திக்காத காலங்களில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்தவர் வைகோ.
வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, மே 1-ந்தேதி ஊதியத்துடன் விடுமுறை, என்.எல்.சி தனியார் மயமாக்கலை தடுத்தது, ரெயில்களில் டி.டி.ஆருக்கு படுக்கை வசதி, பாராளுமன்றத்தில் அம்பேத்கர் படம் வைக்க குரல் கொடுத்தது, ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தது என பலவற்றில் பங்காற்றியவர் வைகோ.

1978-ம் ஆண்டு முதன் முதலாக பாராளுமன்றத்தில் சென்றபோது இந்தி திணிப்புக்கு எதிராக பேசினார். தற்பொழுது தன்னுடைய 81 வது வயதில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடியும் நேரத்திலும் கூட மும்மொழி கொள்கைக்கும், இந்தி திணிப்புக்கும் எதிராக பேசினார்.
3 முறை மத்திய மந்திரி பதவி தேடி வந்த பொழுதும் அதை மறுத்தவர் வைகோ. அந்த தலைவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
பொன் குடம் உடைந்தாலும் அது பொன் குடம் தான். பாராளுமன்ற புலி வைகோ தான். வைகோவிற்கு பதவி ஒரு பொருட்டல்ல, மக்கள் பணி எப்போதும் தொடரும்.
நாங்கள் கடந்த ஆண்டு தேர்தல் நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தி.மு.க. தலைமை தெரிவித்தார்கள்.
மாநிலங்களவை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு வருத்தம் உள்ளது.
தமிழ்நாட்டு நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம். தமிழ்நாட்டின் நலனுக்காக கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் வைகோ போட்டியிடுவது குறித்து அவரும் கட்சி தலைமையும் தான் முடிவெடுப்பார்கள்.
.ஜூன் 22-ந்தேதி ம.தி.மு.க. பொதுக்குழு நடைபெற உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதில் விவாதிக்க உள்ளோம்.
இவ்வாறு துரை வைகோ கூறினார்.
