முதலமைச்சருக்கே தேர்தலை சந்திக்க பயம் வந்துவிட்டது”-கடம்பூர் ராஜு பேட்டி


கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் ரூ.33 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், இனாம் மணியாச்சி கிராமத்தில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடந்தது.
முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு தலைமை தாங்கி, புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.

முன்னதாக, மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் வைகாசி கொடை விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

,சட்டசபையின் கடந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, போதை பொருள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். ஆனால், எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

உங்கள் தொகுதியில் முதல்வர் என்று ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினர்களும் முக்கிய 10 கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்க முதலமைச்சர் கூறியிருந்தார். நான் அளித்த 10 கோரிக்கைகளில் முதலாவதாக கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது தான். அது பரிசீலனையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 9 கோரிக்கைகளில் 3 மட்டும் தான் நிறைவேற்ற முடியும் என கூறினர். கயத்தாறில் தீயணைப்பு நிலையம், கோவில்பட்டியில் அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட செலிவியர் கல்லூரி, கயத்தாறு தாலுகா மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என கேட்டிருந்தேன். அதற்கு சாத்தியமில்லை என கூறுகின்றனர். இப்படிதான் இந்த அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி. மக்களை ஏமாற்றிய ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கருத்தோடு நாங்கள் தேர்தலை அணுகுகிறோம். அதையே தான் சகோதரர் விஜய்யும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார். கருத்து பிரதிபலிப்பு ஒற்றுமையாக இருப்பதில் தவறில்லை.
அடுத்த ஜனவரியில் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படும். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
கடந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் தவறு செய்துவிட்டனர். இப்போது விழித்துக் கொண்டனர். நிச்சயமாக வரும் தேர்தலில் அரசு ஊழியர்கள் நிலைப்பாடு இந்த ஆட்சி இருக்கக்கூடாது என்ற கருத்தில் இருக்கின்றனர். இது தேர்தலில் எதிரொலிக்கும். முதலமைச்சருக்கே தேர்தலை சந்திக்க பயம் வந்துவிட்டது.
இவ்வாறு கடம்பூர் ராஜு கூறினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, அழகர்சாமி,நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் லட்சுமணப்பெருமாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமர், ஆவின் தலைவர் தாமோதரன்,ஒன்றிய துணைச் செயலாளர் அழகு லட்சுமணன்,அதிமுக நிர்வாகிகள் செல்லையா, விஜயன், விஜயராஜ்,சுந்தர்,முருகன்,மாரிமுத்து, விக்னேஷ்,தாஸ் ,வெற்றி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
