தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனைவியுடன் வந்த ஜி.பி.முத்து; காணாமல் போன தெருவை கண்டுபிடித்து தரக்கோரி மனு அளித்தார்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி. முத்து, டிக்டாக் மூலம் பிரபலம் ஆனவர். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார். இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார்.
திங்கட்கிழமையான இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்று ஆட்சியரிடம் மனு அளிக்க ஜி.பி.முத்து தனது மனைவியுடன் வந்தார்.

மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஜி.பி.முத்து அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:-
“தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் வட்டம்,காலன் குடியிருப்பு வருவாய் கிராமம் உடன்குடி, பெருமாள் புரத்தில் நத்தம் சர்வே எண் 233 ல் கீழ தெரு என்று ஒரூ தெரு இருந்தது, நத்தம் சர்வே எண் 233/21 இடம் முழுக்க அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வருவாய் துறை ஆவணங்களில் உள்ளது.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் சிட்டிசன் திரைபடத்தில் வரும் அத்திப்பட்டு கிராமம் காணாமல் போனது போன்று மேற்படி கீழ தெரு என்று ஒரு தெரு இருந்தது தெரியாமல் அந்த தெரு காணாமல் போய் விட்டது.
அந்த தெரு இருந்த இடம் முழுக்க பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கபட்டு உள்ளது. எனவே தாங்கள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி இடத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் .
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இது பற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கபப்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்துக்கு ஜி.பி/முத்து வந்து இருக்கிறார் என்று தெரிந்ததும் அவரை பார்க்க கூட்டம் கூடி விட்டது. பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.
