கோவில்பட்டியில் 27-ந்தேதி இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து மாதம்தோறும் கடைசி ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது.
இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை யான 27 ம் தேதி கோவில் பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடக்கும் இந்த முகாமுக்கு பழைய மாணவர் சங்க தலைவர் ஜி.ஜெயராஜ் தலைமை தாங்குகிறார். செயலாளர் என் .ராஜவேல் முன்னிலை வகிக்கிறார்.
இந்த முகாமில் கண் நீர் அழுத்த பரிசோதனைசெய்து கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண் விழித்திரை பரிசோதனை செய்யலாம்.
மேலும் பிறவி கண் புரை, மாறுகண், பிறவி கண்நீர் அழுத்த நோய், மாலைக்கண் ஆகிய நோய் உள்ள குழந்தைகளை இந்த முகாமுக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கிட்டப் பார்வை,தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு, முகாமில் 300 ரூபாய் முதல் கண் கண்ணாடிகள் கிடைக்கும்.
கண்புரை நோயாளிகள் கோவில்பட்டி அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.அங்கு அவர்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி,உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.
முகாமில் கண் பரிசோதனைக்கு வருபவர்கள் தங்கள் வசிப்பிட முகவரிக்கான சான்றிதழ் நகல் ஏதாவது எடுத்து வர வேண்டும்.


