என் உயிர் மூச்சு என்றால் அது அதிமுக தான்; டி.ஜெயக்குமார் பேட்டி

அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்த காரணத்தினால் தான் என்று கூறி இருந்தார். இந்த தொகுதியில் உள்ள 40 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காமல் போனதற்கு அக்கட்சியுடன் கூட்டணி வைத்ததான் தான் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக வுடன் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் டி.ஜெயக்குமார் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் சென்னையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை. நான் பதவியை விட்டு விலகுவதாக திருமாவளவன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்;
இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி. பதவிக்காக யார் வாசல் கதவையும் தட்டியது கிடையாது; பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது என் குடும்பம்; உயிர் மூச்சு என்றால் அது அதிமுக தான்.
அதிமுக ஒரு மாபெரும் இயக்கம். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா வழியில்தான் எங்களுடைய இயக்கம் பயணிக்கின்றது; அதில் நானும் தொடர்ந்து பயணிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


