61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்.,15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.
எனவே, அரசாணையின்படி இந்த ஆண்டு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.
இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 254 விசைப்படகுகள், வேம்பாரில் உள்ள 33 விசைப்படகுகள், தருவைகுளத்தில் உள்ள 280 விசைப்படகுகள் ஆக மொத்தம் 567 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இந்த காலகட்டங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை பழுதுநீக்குதல், வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் அறிவிக்கப்படும் நிலையில், மேற்கு கடற்கரையை சேர்ந்த மீனவர்கள் இந்த பகுதியில் மீன்பிடிப்பதை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


