கோவில்பட்டி மகளிர் பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்க பயிற்சி


தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்டம் முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொது மக்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிழல் இல்லா நாள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது.
தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஏப்ரல் மாதம் 10ம்தேதி தொடங்கி சென்னையில் 24ம் தேதி நிழல் இல்லா நாளாகும். இன்று ஏப்.13ம்தேதி கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராமேஸ்வரம், ராமநாதபுரம். ஏப்.14ம் தேதி கம்பம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், பரமக்குடி ஆகிய ஊர்களில் நிழல் இல்லா நாளாகும்.
இதனை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் வட்டமாக நின்றும், ஒரு மேஜையில் வட்ட வடிவில் உள்ள பொருளின் மையப்பகுதியில் ஒரு குச்சியை ஊன்றி நிழலை அளவு செய்தனர்.சரியாக 12:20மணிக்கு நிழல் இல்லா நேரத்தை கண்டறிந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் தலைமை தாங்கினார்அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியை அகிலாராணி முன்னிலை வகித்தார்.இயற்பியல் ஆசிரியை கமலா ராணி அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி(TASS ) மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு நிழல் இல்லா நாளில் நிழல் இல்லா நேரத்தை கண்டறிவது செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி, சகுந்தலா, மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு நிழல் இல்லா நேரத்தை கண்டறிந்தனர்.


