காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளியை கொன்று புதைத்தனர்; சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

திருநெல்வேலி டவுண் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 20) என்ற கட்டிட தொழிலாளியை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்கள் கீதா. சாந்தராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் குருநாதன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் சுமார் 3 மணி நேரம் தேடிய நிலையில், எந்த தடயமும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து தகவல் கொடுத்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் குருநாதன் கோவில் அருகே முட்புதரில் ஆறுமுகம் உடல் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. நள்ளிரவில் போலீசார் உடலை தோண்டி எடுத்து, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்துக்கும், கைது செய்யப்பட்ட சிறுவர்களில் ஒருவருடைய உறவுகார பெண்ணுக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பகையை மனதில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு, ஆறுமுகத்தை மது குடிக்க அழைத்துச் சென்று அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து அங்குள்ள முட்புதூரில் குழிதோண்டி புதைத்தது தெரிய வந்துள்ளது.
இதை தொடர்ந்து 4 போரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


