பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்


ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் நூற்றாண்டு கடந்த பழைய பாலத்திற்கு அருகே ரூ.545 கோடி மதிப்பிலான புதிய ரெயில் பாலம் கட்டுமான பணிகளை, கடந்த 2019, மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து 6 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் கடந்தாண்டு 2024 இறுதியில் நிறைவடைந்தது. இந்த புதிய ரெயில் பாலம் 2,078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 15.5 மீட்டர் உயரமும் கொண்டது. பழைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் உயரமானது.
பாம்பன் புதிய ரெயில் பாலதில் பல்வேறு கட்டமாக சோதனை ஓட்டங்கள் நடைபெற்று இறுதியாக இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காக, எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரில் மண்டபத்துக்கு வந்தடைந்தார். மண்டபத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர் ரவி, ராமநாதபுரம் ஆட்சியர், அமைசர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், நவாஸ்கனி எம்.பி., ஜி.கே. வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, ஹெச். ராஜா தமிழிசை சவுந்தரராஜன், கருப்பு முருகானந்தம், சரத்குமார், அரவிந்த மேனன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பாம்பன் பாலத்தில் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள மேடைக்கு வந்தார்.. அங்கிருந்து புதிய ரெயில் பாலத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதனைத் தொடர்ந்து, பாம்பனில் இருந்து ராமேசுவரத்துக்கு ரெயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தில் சென்றது.. தொடர்ந்து, தூக்குப்பாலம் மேல்நோக்கி உயர்ந்து செல்ல கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் ரெயில் பாலத்தை கடந்து சென்றன.. அதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையின் கண்காணிப்பு டிரோன்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இவை அனைத்தையும் பார்வையிட்ட பிரதமர் நரேந்திரமோடி, அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமேசுவரம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக, ஹெலிகாப்டரில் வந்த பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் இருந்தே ராமர் பாலம் பகுதியை தரிசித்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில்”” இலங்கையில் இருந்து திரும்பி வரும் வழியில் ராமர் சேது தரிசனத்துடன் ஆசிர்வாதமும் கிடைத்தது. அயோத்தியில் சூரிய திலகம் நடந்த அதே நேரத்தில், ராமர் பாலத்தின் தரிசனமும் தற்செயலாக கிடைத்தது. இருவரின் தரிசனமும் பெறுவது பாக்கியமே. நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ள ஸ்ரீராமரின் ஆசிர்வாதம், எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.


