தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 25 பேருக்கு செயற்கைக்கோள் தொலைபேசி: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கென ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் தருவைக்குளத்தைச் சார்ந்த 25 மீன்பிடி விசைப்படகுகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகளை மீனவர்களிடம்ஆட்சியர் இலம்பகவத் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன், இந்திய கடலோர காவல்படை தளபதி வருண், தூத்துக்குடி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் ந.சந்திரா, துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கு.அ.புஷ்ரா ஷப்னம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு உதவி இயக்குநர் தி.விஜயராகவன், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், அனைத்து மீனவ கிராமங்களில் இருந்து மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
* கடல் அரிப்பினை தடுக்க தூண்டில் வளைவு முறையாக அமைக்க வேண்டும்.
* குடிநீர் பற்றாக்குறை தீர்த்தல், மின்வசதி ஏற்படுத்துதல், பேருந்து வசதி ஏற்படுத்துதல், புன்னக்காயலில் ஒருங்கிணைந்த பெட்ரோல், டீசல் பங்க் அமைத்தல், நலவாரியத்தில் வழங்கப்படும் உதவித்தொகையினை உயர்த்தி வழங்குதல், புறம்போக்கு நிலத்தினை ஆக்கிரமிப்பினை தடுத்தல் வேண்டும்.
*தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையினை பழுதுபார்த்தல், கடற்கரை கிராமங்களில் நூலகம் அமைத்தல், கடல் ஆமைகள் குஞ்சு பொரிக்கும் இடங்களை பாதுகாத்தல், கடலோர பாதுகாப்பு மண்டலம் வரைபடத்தினை அனைத்து மீனவ கிராம பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து இறுதி செய்ய வேண்டும்.
* புதியதாக பதிவு செய்யப்படும் நாட்டுப்படகுகளுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதை உறுதி செய்தல், புனிதவெள்ளி தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை அடைத்தல்,
திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் திருட்டினை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்துதல், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மருத்துவ வசதி, ஏடிஎம் மையம் வசதி ஏற்படுத்தல், தூத்துக்குடி கடற்பகுதியில் கன்னியாகுமரி மற்றும் கேரள மீனவர்கள் மீன்பிடிப்பதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், தூத்துக்குடி அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளை கடலில் கொட்டவிடாமல் தடுக்க வேண்டும்.
