கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெறப்படுமா? சட்டசபையில் அமைச்சர் பதில்

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற் குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில் அளித்து பேசியதாவது:-
சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை. புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவு பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் 64 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2-ஆம் இடத்தில் உள்ளது. மேலும், செட்டிநாடு கைமுறுக்கு – சீடை, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டறை கருவாடு – பனங்கற்கண்டு ஆகியவற்றிற்க்கு MSME துறையின் – தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் TNAPEX மூலம் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கபட்டுள்ளது.
ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றி இருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அன்பரசன் பதில் அளித்தார்.
