வேலை உறுதி திட்டத்தில் 2 மாதமாக சம்பளம் இல்லை: கோவில்பட்டியில் 4 கிராம பெண்கள் போராட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழவிபட்டி ஊராட்சியில் கிழவிபட்டி, கெச்சிலாபுரம், செண்பகபேரி, துரைச்சாமிபுரம் ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பளம் வழங்கப்படாததால், நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் , விவசாய தொழிலாளர் சங்க கிளை செயலாளர் சித்ரா, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மணி, கிருஷ்ணவேணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சின்னத்தம்பி, விஜயராஜ், கணேசன் மற்றும் வேலை உறுதி திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
