• June 15, 2025

சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை- 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்க்க வேண்டும்;முதல் -அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி.வலியுறுத்தல்  

 சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை- 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்க்க வேண்டும்;முதல் -அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி.வலியுறுத்தல்  

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்த்தித்து பேசினார். அப்போது முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் துரை வைகோ  கூறி இருப்பதாவது:

மக்காச்சோளத்திற்கு, 1% செஸ் வரியை நீக்கம் செய்து மக்காச்சோள விவசாயிகளின் வயிற்றில் முதல்வர் பாலை வார்த்துள்ளார் அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டேன்.

அப்போது எனது நான்கு முக்கிய கோரிக்கைகளை அவரிடம்  தெரிவித்தேன். அதன் விவரம் பின்வருமாறு:

1) கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிவாழ் மக்களின் பெரும் வாழ்வாதாரமாக விளங்கும் தீப்பெட்டி தொழிலை நலிவடையச்செய்யும் வகையில் உள்ள லைட்டர்கள் மற்றும்  அதன் உதிரி பாகங்களை தயாரிப்பதற்கும், அதனை விற்பனை செய்வதற்கும் தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும் என்ற எனது முதல் கோரிக்கையை முன் வைத்தேன்.

2) தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 12 ஊராட்சிகளை இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு தனி ஒன்றியமாக வரையறுத்து, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைக்க வேண்டும் அவ்வாறு இயலாத பட்சத்தில் மேற்கண்ட 12 ஊராட்சிகளையும்,  கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைத்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் முழுமையாகக் கொண்டு வர வேண்டும். அதே போல் இந்த 12 ஊராட்சி பகுதிக்குட்பட்ட  தென்காசி மாவட்ட நிர்வாகத்தில் இருக்கும் இதர சில துறைகளையும் தூத்துக்குடி வருவாய் மாவட்ட நிர்வாகத்துடன் இணைத்திட வேண்டும் ..என்னுடைய இரண்டாவது கோரிக்கையாக முன்வைத்தேன்.

3) நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறையாக அனுசரிக்கப்படும் ஐயா வைகுண்டர் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறை நாளாக  அறிவித்து, அன்று முழு நாளும் மதுக்கடைகளை மூடும்படி, அய்யாவழியின் தற்போதைய தலைவராக உள்ள பால பிரஜாபதி அடிகளார் வைத்த கோரிக்கையை எடுத்து வைத்தேன்.

4) அனைத்து மதத்தை சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அரணாக தன் தனி வீரத்தாலும், படை பலத்தாலும், பொற்கால ஆட்சி நடத்திய மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கோவில்பட்டியில் முழுஉருவ வெங்கலச் சிலை அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் விருப்பத்தை எனது நான்காவது கோரிக்கையாக வழங்கினேன்.

அனைத்தையும் கேட்டுக்கொண்டு பரிசீலிப்பதாக முதல் அமைச்சர் உறுதி அளித்தார்

இவ்வாறு துரை வைகோ கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *