பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத ராஷ்மிகாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ மிரட்டல்

கர்நாடக அரசின் செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை சார்பில் 16-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. ‘வேற்றுமையில் உலகளாவிய அமைதி’ எனும் கருப்பொருளில் திரைப்பட விழா நடக்கிறது. கடந்த 2-ந் தேதி நடைபெற்ற தொடக்க விழாவில், பெரும்பாலான கன்னட நடிகர், நடிகைகள், திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை. சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு வரும் போது, அவர்களை பார்த்து கொள்கிறேன் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மிரட்டும் விதமாக பேசியிருந்தார்.
இதற்கிடையில், திரைப்பட விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்து கொள்ள மறுத்ததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.ரவி கனிகா அவரை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய ரவி கனிகா, ’10 – 12 முறை அழைப்பு விடுத்தும் திரைப்பட விழாவில் பங்கேற்க நேரமில்லை என்று கூறிய ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். கன்னட சினிமாக்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை நிறுத்தும்படி முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரிக்கு கடிதம் எழுத உள்ளேன். கன்னடா மொழி, சினிமா, கலாச்சாரத்தை புறக்கணித்த, அவருக்கு பாடம் புகட்ட வேண்டும்’ என்று அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படம் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
