விரைவில் தொடங்கும் ‘மரகத நாணயம் 2’

தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பேண்டஸி காமெடி படமாக உருவான இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.
அதாவது இந்த படம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இரும்பொறை எனும் மன்னனுக்கு சொந்தமான மரகத நாணயத்தை கைப்பற்ற முயற்சிக்கும் வகையில் நகைச்சுவையாக உருவானது. கடைசியில் அதை கைப்பற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதையாக இருந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், முதல் பாகத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி இந்த பாகத்தை தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது
இரண்டாம் பாகத்தில் ஆதி, நிக்கி கல்ராணி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நடிகர் ஆதி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ‘மரகத நாணயம் 2’ படத்திற்கான அப்டேட் கொடுத்துள்ளார்.
அதாவது, “இப்படம் விரைவில் தொடங்க உள்ளதாகவும், தற்போது பிரீ புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும், இந்த படத்தில் முதல் பாகத்தில் இருந்த அதே படக்குழுவும், கூடுதலாக சிலரும் இணைய உள்ளனர் என்றார். அதே சமயம் இந்த படத்தை தரமான படமாக வழங்க நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
